செய்திகள்
தற்கொலை

வேலூர் சலவன்பேட்டையில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-21 09:52 GMT   |   Update On 2020-09-21 09:52 GMT
வேலூர் சலவன்பேட்டையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:

வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி இந்துமதி. கணேசனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், இந்துமதியிடம் மீண்டும் மதுகுடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். அதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரவு வீட்டின் மின்விசிறியில் கணேசன் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து இந்துமதி அளித்த புகாரின் பேரில் வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News