செய்திகள்
ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோடு:
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார செயலாளர் சோமசுந்தரம் தலைமை தலைமை தாங்கினார்.
கொரோனாவுக்கான ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா பாதிப்பு நிலையில் மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத்தொகையை வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கை, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மசோதா, மின்சார சட்ட திருத்த மசோதா போன்றவற்றை திரும்ப பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.