செய்திகள்
கைது

கெலமங்கலம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் 9 பேர் கைது

Published On 2020-09-19 12:05 GMT   |   Update On 2020-09-19 12:05 GMT
கெலமங்கலம் அருகே பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தை அடுத்த குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 35). கெலமங்கலம் ஒன்றிய பா.ஜனதா கட்சி இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். கடந்த, 15-ந் தேதி இரவு குந்துமாரனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே, கெலமங்கலத்தை சேர்ந்த சதீஷ் என்பவருடன் சேர்ந்து, வடமாநில தொழிலாளி ஒருவர் பிறந்த நாள் கொண்டாடினார்.

இதற்கு போத்தசந்திரம் பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது ரங்கநாதன், இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனிடையே குடிபோதையில் இருந்த போத்தசந்திரத்தை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்து, ரங்கநாதன் வீட்டிற்கு கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று, ஓட, ஓட அவரை விரட்டி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜனதா கட்சியினர், ரங்கநாதன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கமலேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அப்போது போத்தசந்திரத்தை சேர்ந்த தமிழரசன் (21), அம்ரீஷ் (20), ராஜேஷ் (23), சின்னராஜ் (22), தேவகுமார் (25), ராமு (26), லட்சுமணன் (24), பிரகாஷ் (26), கூட்டூர் கிரி (26) ஆகிய 9 பேரும் ரங்கநாதனை வெட்டிக்கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 9 பேரையும் கெலமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News