செய்திகள்
திருபுவனை நூற்பாலை ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

திருபுவனையில் கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் சாலை மறியல்- 70 பேர் கைது

Published On 2020-09-18 21:03 GMT   |   Update On 2020-09-18 21:03 GMT
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருபுவனை:

திருபுவனையில் கூட்டுறவு நூற்பாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆலை மூடப்பட்டது. இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள், தங்கள் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பளம் வழங்கக்கோரி ஊழியர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் சம்பளம் வழங்கக்கோரி நூற்பாலை அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று அனைத்து தொழிற்சங்கத்தினரும் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கினர். நூற்பாலை முன்பு ஒன்று திரண்ட அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு புதுச்சேரி மத்திய சங்கங்களை சேர்ந்த என்.ஆர்.டி.சி. மோகன்தாஸ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. நிர்வாகி குணசேகரன், தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆலையின் சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த மறியல் போராட்டத்தால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதனை ஏற்காமல் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர். சிறிது நேரத்துக்கு பின் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News