செய்திகள்
கொலை

கெலமங்கலம் அருகே பா.ஜனதா பிரமுகரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்

Published On 2020-09-16 06:40 GMT   |   Update On 2020-09-16 06:40 GMT
கெலமங்கலம் அருகே பா.ஜனதா பிரமுகரை மர்ம நபர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலமங்கலம் அருகே குந்துமாரனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடசாமி. இவரது மகன் ரங்கநாதன் (வயது 35). இவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். தற்போது பா.ஜனதா கட்சியில் ஒன்றிய இளைஞரணி தலைவராக இருந்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி கீதா(25) என்ற மனைவியும், ரிஷிகேஷ் (3), தனஞ்செயன் (1) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ரங்கநாதனின் மகன் தனஞ்செயனின் பிறந்த நாள் ஆகும். இதனால் மகன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ரங்கநாதன் அப்பகுதியில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று கேக் வாங்கினார்.

பிறகு இரவில் ரங்கநாதன் வீடு அருகே சென்றார். அப்போது அங்கு கார், மோட்டார் சைக்கிளில் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென ஒரு மர்ம கும்பல் வந்தனர். அவர்கள், ஆயுதங்களால் ரங்கநாதனை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கி வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

பின்னர் இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நங்கநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக் கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை குறித்து கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கொலையுண்ட பா.ஜனதா பிரமுகர் ரங்கநாதனுக்கும், பொட்டசந்திரம் பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரங்கநாதனை கொலை செய்தவர்கள் அந்த கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை குந்துமாரனப்பள்ளி பஸ் ஸ்டாப் அருகே பா.ஜனதாவினர் திடீரென திரண்டனர். பா.ஜனதா மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் அக்கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தேன்கனிக் கோட்டை டி.எஸ்.பி. சங்கீதா, ஓசூர் கலால் டி.எஸ்.பி. சங்கர், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர்கள் ராயக்கோட்டை கமலேசன், தேன்கனிக் கோட்டை சாவித்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

அப்போது மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர், ‘ரங்கநாதனை கொன்ற கும்பலை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம்’ என்று கூறினர். இதைத்தொடர்ந்து பா.ஜனதாவினரிடம் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

மேலும் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News