செய்திகள்
வங்கி கணக்கு

ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 1,114 கணக்குகள் முடக்கம்

Published On 2020-09-12 14:01 GMT   |   Update On 2020-09-12 14:04 GMT
ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 1,114 கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டன.

ஈரோடு:

பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலியாக விவசாயிகள் சேர்க்கப்பட்டு கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது.

ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டத்தில் மொத்தம் 97 ஆயிரத்து 898 பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இதில் முறைகேடு குறித்து அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்தனர். குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பெற்ற 4,250 விண்ணப்பங்களில் தான் மோசடி நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விண்ணப்பங்களில் உள்ள முகவரி, சர்வே எண், ஆதார் எண், சிட்டா அடங்கல் உள்ளிட்டவைகளை வைத்து கடந்த ஒரு வாரமாக கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய வட்டாரங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர்.

இதில் 4,251 கணக்குகளில் முழுமையாக ஆய்வு செய்ததில் 3,671 கணக்குகள் தகுதியானவை என உறுதி செய்யப்பட்டது. 580 கணக்குகள் முடக்கப்பட்டன. அந்த கணக்கில் அரசு வழங்கிய 13.10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 580 போலி கணக்குகள் கண்டறியப்பட்டு அவை முடக்கப்பட்டுள்ளன.இது தவிர வெளி மாவட்டங்களில் நிலம் வைத்திருப்பவர்களில் 1,114 பேர் ஈரோடு மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் இணைந்து வங்கி கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் ஏன் ஈரோடு மாவட்டத்தில் கணக்கு வைத்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது இவற்றை பிற மாவட்ட வேளாண் துறையினர் ஆய்வு செய்கின்றனர்.

இதனால் ஈரோட்டில் உள்ள அவர்களது வங்கிக் கணக்கை முடக்கி உள்ளேம். அவர்களது வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய 67.76 லட்சம் ரூபாயை முடக்கி வைத்துள்ளோம். தகுதியான பயனாளிகள் இருந்தால் அவரது வங்கி கணக்கு தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். தவறு கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களது வங்கி கணக்கில் இருந்து உரிய தொகை பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News