செய்திகள்
2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருப்பத்தூர் மாவட்ட வலைதளம் - 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Published On 2020-09-12 11:38 GMT   |   Update On 2020-09-12 11:38 GMT
திருப்பத்தூர் புதிய மாவட்டத்தின் மாவட்ட வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதை, 2 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்டரங்கில் புதிதாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கென மாவட்ட தகவலியல் மையம் மூலமாக உருவாக்கப்பட்ட மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து அரசு துறைகளின் தகவல்கள் குறித்தும், முக்கிய இடங்கள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் விதமாக புதிய மாவட்ட வலைதளம் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் சிவன்அருள் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் ஆகியோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அரசு திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் கணினி மற்றும் கைப்பேசி வாயிலாக இவ்வலைதளத்துக்குச் சென்று தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் குறித்து அனைத்துப் பொதுத்தகவல்கள், வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, வேளாண்மைத்துறை, தொழில்துறை போன்ற பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் இடங்களில் இருந்தே தங்களுக்கு தேவையான அரசு துறை சேவைகள், விவரங்கள் ஆகியவற்றை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தகவல் தொடர்புத்துறையின் சார்பில் தினந்தோறும் வெளியிடப்படும் மாவட்ட செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை காணமுடியும். இவ்வலைதளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு நேற்று முதல் கொண்டு வரப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மின்ஆளுமை மாவட்ட மேலாளர் ஜெகன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் டி.டி.குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News