செய்திகள்
விபத்து பலி

அரியலூர் அருகே கார் -லாரி மோதல்: அடகு கடை உரிமையாளர் மனைவி பலி

Published On 2020-09-12 12:13 IST   |   Update On 2020-09-12 12:13:00 IST
அரியலூர் அருகே விபத்தில் அடகு கடை உரிமையாளர் மனைவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்:

கும்பகோணத்தை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது 52).இவர் அங்குள்ள பெரிய கடை தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி மனிஷா. இவர்களது மகள் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நரேஷ்குமார் அவரது மனைவியுடன் சென்னை சென்றார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு நேற்றிரவு கும்பகோணம் புறப்பட்டனர்.

காரை திருவிசைநல்லூரை சேர்ந்த திருமுருகன் ஓட்டினார். இன்று அதிகாலை அரியலூர் மாவட்டம் கூவத்தூர் குடிக்காடு கிராமம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும், காரும் நேருக்குநேர் மோதின. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய மனிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நரேஷ்குமார், டிரைவர் திருமுருகன் உயிருக்கு போராடினர். சம்பவ இடத்திற்கு ஆண்டிமடம் போலீசார் சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News