செய்திகள்
கோப்புபடம்

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு - பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

Published On 2020-09-11 13:27 IST   |   Update On 2020-09-11 13:27:00 IST
சத்தியமங்கலம் காந்தி நகரில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடை முன்பு ஏராளமானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்-கோவை ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை மதில் சுவரையொட்டி புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஏற்பாடு நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து டாஸ்மாக் கடை திறப்பது கைவிடப்பட்டது.

ஆனால் 8 மாதங்கள் கழித்து மீண்டும் அதே இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடு நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், சாலைமறியல், ஆர்ப்பாட்டம், தர்ணா, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுதல், மெழுகுவர்த்தி ஏந்துதல் போன்ற பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி டாஸ்மாக் கடை திறப்பதற்கு அரசு அதிகாரிகள் மீண்டும் ஏற்பாடு செய்தார்கள். இதுபற்றி அறிந்ததும் பொதுமக்கள் அங்கு சென்று கடை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அங்கிருந்த போலீசார், ‘டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று நீங்கள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்று வாருங்கள். அல்லது யாராவது உயர் அதிகாரிகளை சந்தித்து மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். நீங்கள் கேட்டுக்கொண்டபடி 10-ந் தேதி வரை டாஸ்மாக் கடையை திறக்க மாட்டோம். இதில் நீங்கள் தவறும் பட்சத்தில் நாங்கள் கடையை திறப்போம்’ என்றனர்.

இதையடுத்து காந்திநகரில் உள்ள டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி கோணமூலை ஊராட்சி தலைவர் பா.செந்தில்நாதன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு டாஸ்மாக் பிரிவு மாவட்ட அதிகாரி மணிமொழி, சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், டாஸ்மாக் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், கிராம நிர்வாக அதிகாரி தவுசியப்பன் ஆகியோர் காந்திநகர் சென்று டாஸ்மாக் கடையை திறக்க முற்பட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்களும், பெண்களும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி.இளங்கோ, சத்தியமங்கலம் நகர தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் ஆர்.ஜானகி, அரியப்பம்பாளையம் பேரூர் முன்னாள் கவுன்சிலர் மாணிக்கம், தலித் விடுதலை கட்சி மாநில இணை பொதுச்செயலாளர் சகுந்தலா தங்கராசு, தி.மு.க இளைஞர் அணி ஸ்ரீராம், ம.தி.மு.க. நகர நிர்வாகி தருமன் உள்பட ஏராளமானோர் காந்தி நகர் சென்று அதிகாரிகளிடம், ‘நாங்கள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் மீதான தீர்ப்பு 11.30 மணிக்கு தான் தெரியவரும். அது வரை கடையை திறக்கக்கூடாது’ என கூறினார்கள்.

இதனை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் 11.30 மணி அளவில், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. ஆனால் அதிகாரிகள் கடையை திறக்க முயன்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், ‘எங்களுக்கு கடையை திறக்க அதிகாரம் கொடுத்ததால் தான் வந்துள்ளோம். கடையை திறக்கக்கூடாது என்று மாவட்ட கலெக்டர் கூறினால் தான் ஏற்றுக்கொள்வோம். நாளை (அதாவது இன்று) காலை வரை உங்களுக்கு நேரம் கொடுக்கிறோம். அதற்குள் கலெக்டரை சந்தித்து ஒரு முடிவு எடுங்கள்’ என்றனர். அதற்கு பொதுமக்கள், ‘கலெக்டரை சந்திக்கிறோம்’ என்று கூறினார்கள்.

ஆனால் தாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டால் அதிகாரிகள் டாஸ்மாக் கடையை திறந்துவிடுவார்கள் என பொதுமக்கள் நினைத்து, கடை முன்பு உட்கார்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மதியம் ஓட்டலில் இருந்து சாப்பாடு வரவழைத்துக்கொண்டு அங்கேயே வைத்து அனைவரும் சாப்பிட்டனர்.

மதிய சாப்பாடு முடிந்ததும் பொதுமக்கள் தங்களுடைய காத்திருப்பு போராட்டத்தை மீண்டும் தொடர்ந்தனர். இந்த போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. இரவு 8 மணி அளவில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். குறிப்பாக இரவு என்றும் பாராமல் ஏராளமான பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.

இந்த நிலையில் இரவு 9 மணிஅளவில் சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘இதுகுறித்து நாளை (அதாவது இன்று) மாலை 3 மணி அளவில் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம். எனவே போராட்டக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள்,’ என்றனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்ட சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘நாளை (அதாவது இன்று) மாலை கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எனினும் நாங்கள் எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி நாளை (அதாவது இன்று) காலை 9 மணி அளவில் போராட்டத்தை மீண்டும் தொடர்கிறோம். போராட்டக்குழுவில் ஒரு பிரிவினர், மாலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள்,’ என்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News