செய்திகள்
கோப்புப்படம்

கொரோனாவுக்கு பலியான மூதாட்டி உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2020-09-10 13:26 IST   |   Update On 2020-09-10 13:26:00 IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கொரோனாவுக்கு பலியான மூதாட்டி உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பாலக்குட்டை பகுதியை சேர்ந்த 72 வயது மூதாட்டி காய்ச்சல் காரணமாக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து மூதாட்டி அந்தியூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த 2 மணி நேரத்திலே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்ய அவரது சொந்த ஊரான பாலக்குட்டைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு நிலவியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் வருவாய் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில் அந்தியூர் அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் மூதாட்டி உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் மூதாட்டியின் உடல் பெரிய ஏரி பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

உடல் அடக்கத்தை பாதுகாப்பு கவச உடை அணிந்த ஊராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Similar News