செய்திகள்
பரவனாற்று பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் - கலெக்டர் உத்தரவு
குறிஞ்சிப்பாடி அருகே பரவனாற்று பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.
கடலூர்:
வடகிழக்கு பருவமழையையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய ஏரிகள், வாய்க்கால்கள், விபத்து ஏற்படக்கூடிய இடங்களை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய பகுதியான கொளக்குடி ஊராட்சியில் உள்ள ஏரி, பரவனாறு வாய்க்காலை என்.எல்.சி. நிர்வாகம் தூர்வாரி கரையை பலப்படுத்தி உள்ளது.
இந்த பணியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் கிராமத்தில் செங்கால் ஓடையும், பரவனாறும் இணையும் இடத்தை பார்வையிட்டு உடனடியாக அங்கு தடுப்புச்சுவர் அமைக்க உத்தரவிட்டார்.
அதன்பிறகு கல்குணம்- டி.வி.நல்லூர் செல்லும் சாலையில் உள்ள பரவனாற்று பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையினால் துண்டித்து போனது. அதில் தற்காலிக பாலம் அமைத்து பொதுமக்கள் சென்று வருகின்றனர். தற்போது அதில் நபார்டு வங்கி மூலம் ரூ.2½ கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது. அந்த இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு விரைவில் பணிகளை தொடங்க உத்தரவிட்டார். ஆய்வின் போது குறிஞ்சிப்பாடி தாசில்தார் கீதா, ஒன்றிய ஆணையாளர் சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசிகாமணி மற்றும் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.