செய்திகள்
கொரோனா பரிசோதனை

கோவை மாநகர பகுதியில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2020-09-09 08:28 GMT   |   Update On 2020-09-09 08:28 GMT
கோவை மாநகர பகுதியில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. குறிப்பாக தினமும் 500 பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் கோவை மாநகராட்சி பகுதியில் வசிக்கின்றனர்.

எனவே மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. குறிப்பாக தினமும் 4 ஆயிரம் பேர் முதல் 4,500 பேர் வரை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதன் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியும். கோவை மாநகராட்சியில் மட்டும் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 14 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 10 ஆயிரம் பேர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிற பாதிப்புகள் இருக்கிறதா என்பதை கண்டறிய சித்தாபுதூர் மாநகராட்சிப் பள்ளியில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது ஜி.சி.டி. கல்லூரி மற்றும் சிங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபம், ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் இதுபோன்ற பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும். மேலும் மாநகராட்சி சார்பில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் உள்ளவர்களின் விவரம் கணக்கிடப்படுகிறது. இதுபோன்ற பரிசோதனை மாநகராட்சி பகுதியில் மட்டும் 7 லட்சம் பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு  அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News