செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வேனையும், புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகளையும் படத்தில் காணலாம்.

வேனில் கடத்திய ரூ.7¾ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2020-09-09 05:24 GMT   |   Update On 2020-09-09 05:24 GMT
கே.என்.பாளையம் அருகே வேனில் கடத்திய ரூ.7¾ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
டி.என்.பாளையம்:

கே.என்.பாளையம் வன சோதனை சாவடி அருகே பங்களாப்புதூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வேகமாக வந்தது. அந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் சரக்கு வேனை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் 35 மூட்டைகளும், 10 அட்டை பெட்டிகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

உடனே போலீசார் அவற்றை பிரித்து பார்த்தனர். அப்போது அவற்றின் மேற்பகுதியில் வெங்காயமும், அடியில் தடை செய்யப்பட்ட புகையிலையான பான் மசாலா, குட்கா போன்ற பாக்கெட்டுகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த செந்தில்குமார் (30) என்பதும், கர்நாடக மாநிலம் கோழிபாளையத்தில் இருந்து புகையிலை பொருட்களை மதுரைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து மூட்டைகள், அட்டை பெட்டிகளில் இருந்த ரூ.7 லட்சத்து 75 ஆயிரத்து 200 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News