செய்திகள்
ராமேசுவரம் கோவில்

ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பின்பும் ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

Published On 2020-09-08 09:43 GMT   |   Update On 2020-09-08 09:43 GMT
ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த பின் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்த அளவே பக்தர்கள் வந்தது அங்குள்ள வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ராமேசுவரம்:

இந்துக்களின் புண்ணிய தலமாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள்தோறும் வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

குறிப்பாக அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அக்னி தீர்த்த கடலில் நீராடவும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக அனைத்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

அதன்படி ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் திறக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்பட்டன ஆனால் ராமேசுவரத்திற்கு வெளியூர் பயணிகளின் வருகை குறைந்த அளவே இருந்தன.

தளர்வுகள் அறிவித்த பின் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைந்த அளவே பக்தர்கள் வந்தது அங்குள்ள வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது

ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந் தவர்கள் கார்களில் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். உள்ளூர் பக்தர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால் ராமேசுவரம் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

ராமேசுவரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருகிலுள்ள தனுஷ் கோடிக்கு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தனுஷ்கோடிக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
Tags:    

Similar News