செய்திகள்
கைது

ஒரத்தநாடு அருகே விவசாயி கொலை- 3 பேர் கைது

Published On 2020-09-07 11:10 GMT   |   Update On 2020-09-07 11:10 GMT
ஒரத்தநாடு அருகே விவசாயி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்கரை கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் செந்தில்நாதன் (வயது48). விவசாயி. இவர் கடந்த 3-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு பின்னர் மீண்டும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிலர் செந்தில்நாதன் வீட்டுக்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தனர். இதை செந்தில்நாதன் தட்டிக்கேட்டார். இதனால் அவருக்கும், சில வாலிபர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செந்தில்நாதன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் அவரை தெற்கு கோட்டையை சேர்ந்த சாமிநாதன் மகன் கவிதாசன் (20), யோகநாயகிபுரத்தை சேர்ந்த பஞ்சையன் மகன் புகழேந்தி (19), தொண்டராம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் ஆகாஷ் (19) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று செந்தில்நாதனை வழிமறித்து கட்டையால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த செந்தில்நாதன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த தகராறு தொடர்பாக பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்நாதன் சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கினை பாப்பாநாடு போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து கவிதாசன், புகழேந்தி, ஆகாஷ் ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.
Tags:    

Similar News