செய்திகள்
பழனியில் விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, பணம் திருட்டு
பழனியில் விவசாயி வீட்டில் பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவை மர்ம நபர்களால் திருடு போனது.
பழனி:
பழனி ஆர்.எம்.கே. நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி விட்டு பழனி அருகே தும்பலப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர் நேற்று மதியம் வீட்டுக்கு வந்து அவர் பார்த்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது அங்கு பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.