செய்திகள்
ஐகோர்ட்டு

கருப்பு கவுன் அணியாமல் வக்கீல்கள் ஆஜராக அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-09-05 08:19 GMT   |   Update On 2020-09-05 08:19 GMT
கொரோனா பரவல் காரணமாக வக்கீல்கள் கோட், கவுன் அணிய விலக்கு அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

கொரோனா ஊரடங்கினால் ஐகோர்ட்டு உள் மற்றும் மாவட்ட கோர்ட்டுகள் மூடப்பட்டன. தற்போது வழக்குகள் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறையில் வழக்குகளை விசாரிப்பதை வக்கீல்கள் பலர் விரும்பவில்லை.

இதையடுத்து ஐகோர்ட்டு திறந்த வெளியில் வழக்குகளை நேரடி முறையில் விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியை சந்தித்து வக்கீல் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 6 அமர்வுகளும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் 2 அமர்வுகளும் திங்கட்கிழமை முதல் நேரடியாக வழக்குகளை விசாரிக்க உள்ளன.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஐகோர்ட்டு பதிவுத்துறை ஏராளமான கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்துள்ளன. அதன்படி வக்கீல்கள் மட்டுமே வழக்கு விசாரணைக்கு அனுமதிக்கப்படுவார்கள். வெளிநபர்கள் யாருக்கும் அனுமதி கிடையாது.

கோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள், கிருமி நாசினியால் கைகளை கழுவி, முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவேண்டும் என்று ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வக்கீல்கள் வழக்கமாக அணியும் சீருடையில் சில விலக்கு கேட்டு மெட்ராஸ் பார் அசோசியேசன் என்ற வக்கீல் சங்கம் ஐகோர்ட்டுக்கு கோரிக்கை விடுத்தது. அதில், கொரோனா பரவல் காரணமாக கோட், கவுன் அணிய விலக்கு அளிக்கவேண்டும்.

அதற்கு பதில் கழுத்தை சுற்றி வெள்ளை கலர் பேண்ட் அணிந்து கோர்ட்டில் ஆஜராக அனுமதிக்கவேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த கோரிக்கையை ஐகோர்ட்டு ஏற்றுக் கொண்டது. ஏற்கனவே கருப்பு கோட், கருப்பு கவுன் அணிய விலக்கு அளித்து கடந்த மே மாதம் 14-ந்தேதி இந்தியா பார் கவுன்சில் பிறப்பித்த உத்தரவை வக்கீல்கள் பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News