செய்திகள்
பெரியார் சிலையில் தார் ஊற்றப்பட்டுள்ள காட்சி.

அரியலூர் அருகே பெரியார் சிலையில் தார் ஊற்றி அவமதித்த மர்ம நபர்கள் யார்?- போலீசார் விசாரணை

Published On 2020-09-04 09:21 GMT   |   Update On 2020-09-04 09:21 GMT
அரியலூர் அருகே பெரியார் சிலையில் தார் ஊற்றி அவமதித்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து சி.சி.டி.வி. காட்சி மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் வி. கைகாட்டி அருகே தேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் மார்பளவு பெரியார் சிலை உள்ளது. நேற்று அந்த சிலையின் கண்கள் மீது தார் ஊற்றப்பட்டு அவமதிக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க.வினர் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கயர்லாபாத் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து தி.மு.க. மற்றும் திராவிடர் கழகக்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

நள்ளிரவில் மர்மநபர்கள் பெரியார் சிலை மீது தாரை ஊற்றி சென்றிருக்கலாம் என தெரிகிறது. அதில் ஈடுபட்டவர்கள் யாரென்று கண்டறிய போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். தமிழகத்தில் தொடர்ந்து பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News