செய்திகள்
பலி

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி- காப்பாற்ற முயன்ற வாலிபரும் இறந்த பரிதாபம்

Published On 2020-08-28 11:10 GMT   |   Update On 2020-08-28 11:10 GMT
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பரிதாபமாக இறந்தன. காப்பாற்ற முயன்ற வாலிபரும் உயிரிழந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சேமங்கலம் ஊராட்சி கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவருடைய மகன் சீதாராமன் (வயது 22).

பாலிடெக்னிக் படித்து முடித்துள்ள இவர், நேற்று காலை தங்கள் வீட்டில் வளர்த்து வந்த 2 பசு மாடுகளை மேய்ச்சலுக்கு வீட்டின் அருகில் உள்ள வயலுக்கு ஓட்டிச் சென்றார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் பெய்த மழையால் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன.

இது தெரியாமல் மின் கம்பிகளின் மீது அங்கு மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மிதித்து விட்டன. இதனால் மின்சாரம் தாக்கி 2 மாடுகளும் துடி, துடித்தன. இதனைக் கண்ட சீதாராமன் ஓடிச்சென்று மாடுகளை காப்பாற்ற முயன்றார். அப்போது மின்சாரம் அவரையும் தாக்கியது. இதில் 2 மாடுகளும் பரிதாபமாக இறந்தன. காப்பாற்ற சென்ற சீதாராமன் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று சீதாராமனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News