இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு சுற்றுலா வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: கலெக்டர் எச்சரிக்கை
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது,
நீலகிரி மாவட்டத்துக்கு தினந்தோறும் 2 ஆயிரம் முதல் 2,500 பேர் வரை வருகை தருகிறார்கள். தற்போது தமிழக அரசு இ-பாஸ் பெறும் முறையை எளிமைப்படுத்தியதால் பல்வேறு நபர்கள் வருகை தருகிறார்கள். இதை பயன்படுத்தி சுற்றுலாவுக்காக நீலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
சுற்றுலா சம்பந்தமாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. சுற்றுலா பயணிகள் வர தடை நீடிக்கிறது. சுற்றுலா நோக்கத்தோடு நீலகிரிக்கு வருகிறவர்கள் திரும்பி அனுப்பப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் செயல்படுகிறதா? என்று உள்ளாட்சி துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அங்கு பயணிகள் தங்குவது கண்டறியப்பட்டால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தேவையான பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற்று வர வேண்டும். தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இ-பாசை தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு இல்லாமலும், இ-பாஸ் பெறாமலும் பயணம் செய்யும் நபர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும். கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை அறைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 270 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும் 200 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
நீலகிரியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் தாமதமாக வந்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய முன்வர வேண்டும். தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 34 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டது. மேலும் 30 ஆயிரம் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின. 42 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தது. 400 வீடுகள் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளன. 8 பாலங்களும் சேதம் அடைந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.