செய்திகள்
வாலிபரை கத்தியால் வெட்டிய கூலித்தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை - கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு
கூடலூர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய கூலித்தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை கடசனகொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர், கேத்தன்(வயது33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி மதுகுடித்து விட்டு வந்து ஊருக்குள் சத்தம் போட்டார். இதை அப்பகுதியை சேர்ந்த மாறன் என்பவர் தட்டி கேட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கேத்தன் மாறனை கத்தியால் வெட்டினார். இதுகுறித்து தேவர்சோலை போலீசார் கேத்தனை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு கூடலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பாபு, குற்றவாளி கேத்தனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.