செய்திகள்
சுகாதாரத்துறை அலுவலர்களுடன் கண்காணிப்பு அதிகாரி சுப்ரியா சாகு ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

நீலகிரியில் கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிக்க வேண்டும்- கண்காணிப்பு அதிகாரி அறிவுரை

Published On 2020-08-25 19:40 IST   |   Update On 2020-08-25 19:40:00 IST
நீலகிரியில் கொரோனா சிகிச்சை மையங்கள், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு இன்கோசர்வ் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாகு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி சிகிச்சைகளை அளிக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்து அவர்களுடன் தொடர்புடைய முதல், இரண்டாம் நிலை நபர்களை கண்டறிந்து அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவர்களையும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பது மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் அறிகுறியுடன் நபர்கள் வந்தால் அவர்களின் முழு முகவரிகளை சேகரித்து அந்த பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தினமும் கபசுரக் குடிநீர், ஜிங்க் மாத்திரைகள் ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதோடு அவர்களது உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக முககவசங்கள் அணிவது, அடிக்கடி கை கழுவுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் ஊட்டி மருத்துவ கல்லூரி டீன் ரவீந்திரன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News