செய்திகள்
கோப்புப்படம்

சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2020-08-23 16:44 IST   |   Update On 2020-08-23 16:44:00 IST
பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் சுயதொழில் செய்வதற்காக தொழிற்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில் கடன், தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுகடன் மற்றும் கறவைமாடு வாங்க கடனுதவி பெற விரும்புபவர்கள் மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வியில் சிறந்த சிறுபான்மையின மாணவ- மாணவிகள் உயர் கல்வி பயில்வதற்கான கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் தென்னூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள டாப்செட்கோ மற்றும் டாம்கோ லோன் மேளாவில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறலாம்.

கடன் பெற பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிக பிற்படுத்தப்பட்டோர் அல்லது சிறுபான்மையின மக்களாக இருத்தல் வேண்டும். வயது 18 முதல் 60-க்குள் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.81 ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.ஒரு லட்சத்து 3 ஆயிரத்திற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் கடனுதவி வழங்கப்படும்.

கடன் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், சாதிச் சான்றிதழ் அல்லது பள்ளி மாற்றுச் சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். மேலும், அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்களில் விண்ணப்பங்கள் பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News