செய்திகள்
விவசாயி தற்கொலை சம்பவம்: 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
விவசாயி தற்கொலை சம்பவத்தை தொடர்ந்து 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கெந்தொரை புதுவீடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 38) விவசாயி. இவர் கடந்த 15-ந் தேதி தனது நண்பர் மோட்டார் சைக்கிளில் தொட்டபெட்டா வழியாக கெந்தொரைக்கு சென்றார். அப்போது தேனாடுகம்பை போலீசார் வாகன சோதனை நடத்தினர். சீனிவாசனை நிறுத்தி சோதனை செய்த போது, அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனால் போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். அபராதம் செலுத்திய பின்னர் சீனிவாசன் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. இதையடுத்து சீனிவாசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் திட்டியதாலும், அதிக பணம் செலுத்துமாறு வற்புறுத்தியதால் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக சீனிவாசனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அத்துடன் அவர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரணை நடத்தி 3 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது.
இதற்கிடையே தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், லோகநாதன் ஆகிய 2 பேரை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டார்.
அதன்படி செந்தில்குமார் பந்தலூர் அருகே எருமாடு போலீஸ் நிலையத்துக்கும், லோகநாதன் ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.