செய்திகள்
பழுதான சாலையை படத்தில் காணலாம்.

மசினகுடியில் மின்வாரிய குடியிருப்பு சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

Published On 2020-08-22 15:44 IST   |   Update On 2020-08-22 15:44:00 IST
மசினகுடியில் மின் வாரிய குடியிருப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர்:

மசினகுடியில் இருந்து மாயாறு செல்லும் சாலையில் மின்வாரிய குடியிருப்பு உள்ளது. இது தவிர உடற்பயிற்சி கூடம் உள்பட பல்வேறு மையங்கள் உள்ளன. மேலும் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் மசினகுடி பஜாருக்கு சென்று திரும்புகின்றனர்.

இந்த நிலையில் மின் வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு வாகனங்களில் கொண்டு செல்ல முடிவதில்லை.

இதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையொட்டி மசினகுடி ஊராட்சி அலுவலகத்திற்கு நேற்று மின் வாரிய குடியிருப்பு வாசிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வந்தனர்.

பின்னர் ஊராட்சி தலைவர் மாதவியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், மசினகுடியில் இருந்து மின் வாரிய குடியிருப்பு பகுதி வழியாக மரவகண்டிக்கு செல்லும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்கள் அப்பகுதிக்கு சரிவர வருவதில்லை இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி தலைவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Similar News