செய்திகள்
ஆசிரியை சரஸ்வதி

தேசிய நல்லாசிரியர் விருது- தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு

Published On 2020-08-22 07:14 IST   |   Update On 2020-08-22 07:14:00 IST
மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு ஆகியுள்ளனர்.
சென்னை:

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ந்தேதி ‘ஆசிரியர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ‘தேசிய நல்லாசிரியர் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

சிறப்பு பிரிவில் 2 ஆசிரியர்கள் என மொத்தம் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருது பெற தேர்வாகி இருக்கின்றனர். அதில், தமிழகத்தில் இருந்து சென்னை அசோக்நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள சென்னை அசோக்நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, 32 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருக்கிறார். அவருக்கு இந்த விருது கிடைத்தது குறித்து அவரிடம் கேட்டபோது, ‘மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்னுடைய தனிப்பட்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றி அல்ல. என்னுடைய பள்ளியில் என்னுடன் சேர்ந்து பணியாற்றும் சக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கூட்டு முயற்சி, ஒத்துழைப்பால் எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது’ என்றார்.

Similar News