செய்திகள்
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம்- அமைச்சர் தலைமையில் நடந்தது
பவானி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பவானி:
பவானி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை தாங்கி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் சவுண்டம்மாள், தாசில்தார் பெரியசாமி, நகராட்சி ஆணையாளர் பாரிஜான், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் கோபாலகிருஷ்ணன், நகராட்சி தலைமை பொறியாளர் கதிர்வேலு, சுகாதார அலுவலர் சோலை ராஜா உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறுகையில், ‘பவானி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா நோய் தொற்று உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அனைத்து மக்களும் முககவசம் அணிவதின் அத்தியாவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் அதிக அளவில் சந்திக்கும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தினசரி மார்க்கெட், பெரிய நிறுவனங்கள், மளிகை கடைகள், போன்றவற்றில் அரசின் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்,’ என அதிகாரிகளுக்கு ஆலோசனை தெரிவித்தார்.