செய்திகள்
கைது

ரெயில்வே தண்டவாளத்தில் கல் வைத்த வாலிபர்கள்- 2 பேர் கைது

Published On 2020-08-03 15:39 IST   |   Update On 2020-08-03 15:39:00 IST
ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் கல் வைத்தது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு:

ஈரோடு ரெயில்வே நிலையத்தில் இருந்து கோவை நோக்கி நேற்று முன்தினம் இரவு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் ரங்கம்பாளையம் பகுதியில் மெதுவாக சென்று கொண்டு இருந்தபோது ரெயில்வே தண்டவாளத்தில் அடுத்தடுத்து வைக்கப்பட்டு இருந்த கல்லில் மோதி நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர், ரெயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த கல்லை அப்புறப்படுத்தினார். பின்னர் இதுபற்றி ரெயில்வே அதிகாரிகளுக்கும், ஈரோடு ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்து விட்டு ரெயிலை தொடர்ந்து இயக்கி சென்றார்.

ரெயில் என்ஜின் டிரைவர் கொடுத்த தகவலின் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் தண்டவாளத்தில் கல் வைத்தவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இவர்கள் ரங்கம்பாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று ரோந்து வந்தனர். அப்போது, அங்கு போதையில் சந்தேகப்படும்படியாக சுற்றிதிரிந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஈரோடு சென்னிமலைரோடு முத்துக்குமாரசாமி வீதியை சேர்ந்த ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி பாய் சசிக்குமார் (வயது 21), ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமார் (22) என்பதும், இவர்கள் 2 பேரும் மதுபோதையில் ரெயில்வே தண்டவாளத்தில் கல்வைத்து நாசவேலையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Similar News