செய்திகள்
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும்- வேளாண்மை இணை இயக்குனர்
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும் என்று வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள பொய்யூரில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பழனிசாமி தலைமை தாங்கி, விவசாயிகளிடம் பேசுகையில், ஒருங்கிணைந்த பண்ணையமானது பயிர் சாகுபடி செய்வதுடன் மாடு, ஆடு, கோழி வளர்ப்பது, மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு, காய்கறி தோட்டம், பழச்செடிகள், மரக்கன்றுகள் மக்கிய எரு தயாரித்தல் போன்ற அனைத்து தொழில் நுட்பங்களையும் ஒருங்கிணைந்து செய்து மண்ணின் வளத்தை பெருக்கி விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.
வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா ஒருங்கிணைந்த பண்ணையத்தின் முக்கியத்துவம் பற்றியும், கோடை உழவு செய்து, கடைசி உழவில் வேப்பம் புண்ணாக்கு இடவும் அறிவுறுத்தினார். பயிற்சி வகுப்பில் துணை வேளாண்மை அலுவலர் பீட்டர் அந்தோணிராஜ், வேளாண்மை உதவி அலுவலர்கள் சுப்ரமணியன், ராஜகிரி, தினேஷ், இளநிலை ஆராய்ச்சியாளர் செல்வராணி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் பொய்யூர் தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.