செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

வேலூர் மாவட்டத்தில் நீதிபதி, டாக்டர் உள்பட 383 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-07-25 12:52 IST   |   Update On 2020-07-25 12:52:00 IST
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நீதிபதி, டாக்டர் உள்பட 383 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:

வேலூர் மாவட்டம் கொரோனா பிடியில் சிக்கி தவித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் குறித்த பட்டியல் தினமும் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று காலை பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்பட்டது. அதில் ஒரேநாளில் 170 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதன்படி வேலூர் சலவன்பேட்டை, ஓல்டுடவுன், விருதம்பட்டு, காட்பாடி, கழிஞ்சூர், சேண்பாக்கம் போன்ற மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 80 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

சத்துவாச்சாரி பாப்பாத்தி அம்மன்கோவில் தெரு, சாவடி தெரு, பள்ளதெரு, ரங்காபுரம் பகுதிகளிலும் தொற்று பரவி உள்ளது. சத்துவாச்சாரி கோர்ட்டில் பணியாற்றும் சார்பு நீதிபதி ஒருவர், காந்தி ரோட்டில் 3 தங்கும் விடுதி ஊழியர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர், போலீஸ் குடியிருப்பில் ஒருவர், கன்டோன்மென்ட் ரெயில் நிலைய ஊழியர்கள் 2 பேர், பென்லேன்ட் மருத்துவமனை பணியாளர்கள் 2 பேர், ஜெயில் குடியிருப்பில் ஒருவர், ஆயுதப்படை குடியிருப்பில் காவலர் ஒருவர் மற்றும் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குடியாத்தம் பகுதியில் வங்கியில் பணிபுரிபவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,763 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட அனைவரும் கொரோனா சிறப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுடன் பழகியவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 157 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,277 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 1,556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 61 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 1,843 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 2,112 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 778 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 26 ஆயிரத்து 416 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Similar News