செய்திகள்
அரியலூரில் ஊரடங்கை கண்டுகொள்ளாத மக்கள்
அரியலூரில் பொதுமக்கள் ஊரடங்கை கண்டுகொள்ளாமல் தாங்கள் எப்போதும் போல் வழக்கமாகவே முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் செயல்படுகின்றனர்.
அரியலூர்:
அரியலூரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் ரத்னா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும். அப்படி முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு கடையின் உரிமையாளர்கள் பொருட்கள் வழங்க கூடாது என உத்தர விடப்பட்டுள்ளது. மேலும் கடையின் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நின்றால் அவர்களை உடனே கடையின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லை என்றால் அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் முககவசம் அணியாமல் செல்வேருக்கு தற்போது அபராதம் விதிக்கப்படுகிறது.
இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனா தாக்கம் குறைந்தபாடு இல்லை. இந்த நிலையில் அரியலூரில் பொதுமக்கள் ஊரடங்கை கண்டுகொள்ளாமல் தாங்கள் எப்போதும் போல் வழக்கமாகவே முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் செயல்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.