செய்திகள்
சஞ்சய் தத்

காங்கிரஸ் அரசுக்கு குறிவைத்தே பட்ஜெட்டுக்கு அனுமதி மறுப்பு- சஞ்சய் தத் குற்றச்சாட்டு

Published On 2020-07-15 11:58 IST   |   Update On 2020-07-15 11:58:00 IST
காங்கிரஸ் அரசுக்கு குறிவைக்கும் நோக்கில் புதுவை பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி மறுக்கிறது என்று சஞ்சய்தத் குற்றஞ்சாட்டி உள்ளார்.
புதுச்சேரி:

காங்கிரஸ் கட்சி செயலரும், புதுவை மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசு பட்ஜெட் தயாரித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்து 50 நாட்களுக்கு மேலாகிவிட்டது. இதற்கு ஒப்புதல் தராமல் மத்திய அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. காங்கிரஸ் அரசை குறிவைக்கும் நோக்கில் மத்திய அரசு இத்தகைய தந்திரத்தை கையாளுகிறது. கொரோனா நெருக்கடியின் போது கூட மத்திய அரசு இதுபோல் பாரபட்சமாக நடந்து கொள்கிறது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனாவை எதிர்த்து அரசு போராடுகிறது. பிரதமருடன், முதல்-அமைச்சரின் ஆன்லைன் மாநாட்டின் போது கூட ஜி.எஸ்.டி. மற்றும் பிற மானியங்களில் புதுச்சேரியின் பங்கை திருப்பிச் செலுத்துமாறு மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் பட்ஜெட்டுக்கான அனுமதியை தாமதப்படுத்தி மத்திய அரசு அரசியல் விளையாட்டை விளையாடுகிறது.

மறுபுறும் பா.ஜ.க.வின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் கவர்னர் கிரண்பேடி கொரோனா நெருக்கடியின் இத்தகைய காலகட்டத்தில், அரசின் நலத்திட்டங்களை தடுப்பதிலும், அன்றாட செயல்பாட்டில் தலையிடுவதிலும், நிர்வாகத்தை சீர் குலைப்பதிலும் முனைப்பாக இருக்கிறார்.

மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும், மோசமான சூழ்நிலையை கட்டுப்படுத்துவதற்கும் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குழுவும் களத்தில் இருக்கும்போது கவர்னர் கிரண்பேடி ஊடகங்களிலும், சமூக வலைதளத்திலும் அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் வேலை செய்யும் நாடகத்தை மட்டுமே நடத்துகிறார்.

பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகியோர் பட்ஜெட் அனுமதியை தாமதப்படுத்துகிறார்கள். ஜனநாயகத்தில் மக்களே முக்கியம் என்பதை அவர்கள் மறந்துவிடக்கூடாது. வரும் சட்டமன்ற தேர்தலில் மத்திய அரசின் புதுச்சேரி எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு இது ஒரு பொருத்தமான பதிலை அளிக்கும். மக்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் பா.ஜ.க.வுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் அடுத்தடுத்த தேர்தல்களில் இதே கதியை அனுபவிக்கும். மேலும் மக்களால் தோற்கடிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News