செய்திகள்
கடலூரில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

கடலூர், சிதம்பரத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2020-07-09 09:43 GMT   |   Update On 2020-07-09 09:43 GMT
கடலூர் மற்றும் சிதம்பரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:

ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தமிழக அரசு, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு பி.எல். விடுப்பிற்காக வழங்கிய தொகையை தொழிலாளர்களுக்கு வழங்காமல் காலம் கடத்தியதோடு, இனி இந்த தொகைக்கு பதிலாக விடுமுறை எடுத்துக்கொள்ளுங்கள் என தெரிவிக்கும் ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. நிர்வாகத்தை கண்டிப்பது, சட்டவிரோதமாக பல தொழிலாளர்களை சென்னைக்கு பணியிட மாறுதல் செய்வதை கைவிட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க நிர்வாகி மணிபாலன் தலைமை தாங்கினார். சுதாகர் முன்னிலை வகித்தார். இதில் பரமதயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்தி சிலை அருகே 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ப.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை பொருளாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் நா.வெங்கடேசன் கண்டன உரையாற்றினார். இதில் மகேஸ்வரி உள்பட ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Tags:    

Similar News