செய்திகள்
ராசிபுரம் அருகே ஏ.டி.எம். எந்திரம் தீயில் கருகி இருப்பதை படத்தில் காணலாம்.

கியாஸ் வெல்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - பணம் தீப்பிடித்து எரிந்து நாசம்

Published On 2020-07-06 15:41 GMT   |   Update On 2020-07-06 15:41 GMT
ராசிபுரம் அருகே கியாஸ் வெல்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் எந்திரம் தீப்பிடித்து பணம் எரிந்து நாசமானது.
ராசிபுரம்:

ராசிபுரம் அருகே பாச்சலில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. அதன் நுழைவுவாயில் அருகே யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. மக்களின் பயன்பாட்டிற்காக அந்த வங்கியின் ஏ.டி.எம். மையமும் உள்ளது. இதில் அவ்வப்போது பணம் நிரப்பப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த 3-ந் தேதி வங்கியின் மேலாளர் அப்பாராவ், உதவி மேலாளர் விஸ்வநாதன், அலுவலர் சக்திவேல் ஆகியோர் அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.6 லட்சத்திற்கான நோட்டுக்களை நிரப்பி உள்ளனர். ஏற்கனவே இருந்த ரூ.2 லட்சம் உள்பட மொத்தம் ரூ.8 லட்சம் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து உள்ளது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பண பரிவர்த்தனைக்கு பிறகு நேற்று முன்தினம் நிலவரப்படி ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்து 100 இருந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டர் மூலம் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். இதை அந்த வழியாக 2 மோட்டார்சைக்கிள்களில் வந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து புதுச்சத்திரம் போலீசாரும், ரோந்து போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடந்தது. ஏ.டி.எம். எந்திரமும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவும் தீயில் கருகியது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணமும் நாசமானதாக தெரிகிறது. ஆனால் எவ்வளவு தொகை எரிந்து போனது என்ற விவரம் தெரியவில்லை.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் 3 பேர் கியாஸ் வெல்டர் மூலம் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராவும், அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவும் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்தது தெரிந்தது. இதனிடையே தனியார் கல்லூரியின் நுழைவுவாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் கொள்ளையர்கள் 3 பேர் அதிகாலை 2.30 மணி அளவில் ஏ.டி.எம். மையத்தை நோட்டுமிட்டுச் செல்வதும், பின்னர் 3 மணி அளவில் சாக்குபையுடன் மையத்திற்குள் நுழைவதும், 3.30 மணிக்கு அவர்கள் வெளியே செல்வதும், அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்து கரும்புகை வெளியேறுவதும் பதிவாகி இருந்தது.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News