செய்திகள்
கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கான உணவு தரமில்லை என புகார் - அதிகாரிகள் ஆய்வு

Published On 2020-06-30 17:04 IST   |   Update On 2020-06-30 17:04:00 IST
புதுக்கோட்டையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவில் தரமில்லை என்று கலெக்டருக்கு புகார் வந்ததால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதில் உணவும் ஒரு சிகிச்சை முறையாகவே உள்ளது. இதற்காக பிரத்யேகமாக அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வகையில் உணவுகளோடு, பாரம்பரிய முறையிலான இயற்கை வகையான உணவுகளும் அளிக்கப்படுகின்றன. சைவம் மற்றும் அசைவம் என 2 வகையிலும் உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில் ராணியார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லை என்று கலெக்டருக்கு புகார் வந்தது. இதையடுத்து கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவின் பேரில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையில் தாசில்தார் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் ராணியார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு வினியோகிக்கப்பட்ட ஓட்டலில் இருந்து கொண்டு வரப்பட்ட முட்டையுடன் கூடிய புதினா சாதத்தை அதிகாரிகள் எடுத்து சாப்பிட்டு பார்த்தனர்.

இந்த ஆய்வு குறித்து அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் சில ஒப்பந்த அடிப்படையில் ஓட்டல்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்ட போது அதில் குறை எதுவும் இல்லை. உணவு தரமாகத்தான் உள்ளது. இது குறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது” என்றனர். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமில்லை என புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News