செய்திகள்
கலெக்டர் அன்புசெல்வன்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண தொகை- கலெக்டர் அறிவிப்பு

Published On 2020-06-30 13:24 IST   |   Update On 2020-06-30 13:24:00 IST
அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும் என்று கலெக்டர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார்.
கடலூர்:

கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கை மேற்கொண்டும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 13 லட்சத்து 35 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 ரொக்கமாக அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் தேசிய அடையாள வைத்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் கிராம வாரியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்தில் ரூ.1000 ரொக்கமாக வீட்டிற்கே சென்று வழங்கப்பட உள்ளது.

இந்த நிவாரண தொகை வழங்கும் போது, மாற்றுத்திறனாளிகள் தங்களது அசல் தேசிய அடையாள அட்டையை காண்பித்தும், அதன் நகலை நிவாரண தொகை வழங்கும் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வினியோக படிவம் பூர்த்தி செய்ய தேவையான விவரங்களை மாற்றுத்திறனாளிகள் அளிக்க வேண்டும்.

அதாவது, தனி நபர் சம்பந்தப்பட்ட விவரம், கல்வித்தகுதி, வேலைவாய்ப்பு, அடையாள அட்டை மற்றும் யுடிஐடி விண்ணப்பம் நிலை ஆகியவை ஆகும். தேசிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கொரோனா நிவாரண தொகை வழங்கப்படும். இதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை 9499933472 என்ற எண்ணிலும், மாநில உதவி மைய எண் 18004250111 மற்றும் வாட்ஸ்- அப் எண் 9700799993 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News