செய்திகள்
திருமானூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடியவர் கைது
திருமானூர் அருகே மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூரை சேர்ந்தவர் சித்திரவேல்(வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிட கரையில் உள்ள அவரது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளை கொள்ளிட ஆற்றின் கரையிலேயே நிறுத்திவிட்டு வயலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து திருமானூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது திருடுபோன சித்திரவேலின் மோட்டார் சைக்கிளை ஒருவர் ஓட்டி வந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரிக்கையில், அவர் அரியலூர் மாவட்டம், ஆங்கியனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன்(37) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சித்திரவேலின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த சித்திரவேலின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.