செய்திகள்
முள்ளுவாடி ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை படத்தில் காணலாம்.

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2020-06-18 20:36 IST   |   Update On 2020-06-18 20:36:00 IST
சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சேலம்:

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் வழியாக சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில், சேலம்- விருதாச்சலம் பயணிகள் ரெயில், காரைக்கால்-பெங்களூரு பயணிகள் ரெயில் ஆகிய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர அவ்வப்போது வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ரெயில்கள் இயக்கப்படும்போது முள்ளுவாடி கேட் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். அதனை கருத்தில் கொண்டும், வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும் முள்ளுவாடி ரெயில்வே கேட் பகுதியில் 2 இடங்களில் ரெயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக செரி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொரோனா ஊரடங்கால் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் சேலம்-விருதாச்சலம் ரெயில் மார்க்கத்தில் சரக்கு ரெயில்கள் மட்டும் சென்று வருகின்றன.

இந்தநிலையில், நேற்று காலை பீகார் மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் செவ்வாய்பேட்டை ரெயில்வேகூட்ஸ் ஷெட்டிற்கு 2,600 டன் மக்காச்சோளம் வந்தது. அப்போது முள்ளுவாடி கேட் மூடப்பட்டு இருந்ததால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் சிறிது நேரத்தில் ரெயில் கடந்து சென்றவுடன் ரெயில்வே கேட் திறக்கப்பட்டதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது.

செரி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் பிரட்ஸ் சாலையில் மட்டுமே இரு வழி போக்குவரத்து உள்ளது. குறிப்பாக கலெக்டர் அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, போலீஸ் கமிஷனர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் முள்ளுவாடி கேட் பகுதி வழியாக மொபட், மோட்டார் சைக்கிள்களில் சென்று வருகின்றனர். இதனால் அங்கு எப்போது பார்த்தாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும். எனவே முள்ளுவாடி கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News