செய்திகள்
கொரோனா வைரஸ்

சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் உள்பட 13 பேருக்கு கொரோனா

Published On 2020-06-18 08:45 GMT   |   Update On 2020-06-18 08:45 GMT
சிவகங்கை மாவட்டத்தில் டாக்டர் உள்பட 13 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது
சிவகங்கை:

சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்போது 69 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் ஒரு டாக்டர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கையை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்த 18 வயது பெண், சிவகங்கை காமராஜர் சாலையை சேர்ந்த 2 பெண் மற்றும் ஒரு ஆணுக்கும், காளையார்கோவிலை சேர்ந்த ஒரு ஆணுக்கும், சிவகங்கை மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் ஒரு பெண் டாக்டருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வி.புதூரில் ஒரு ஆண், சிவகங்கை முத்தூரில் ஒரு ஆண், டி.புதூரில் ஒரு பெண், திருப்பத்தூரில் 2 ஆண், ஒரு பெண், ஆண் குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரசால் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13 பேர் பூரண குணமடைந்ததை தொடர்ந்து, அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள் மற்றும் டாக்டர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News