செய்திகள்
குழந்தை

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது

Published On 2020-06-18 12:57 IST   |   Update On 2020-06-18 12:57:00 IST
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.
கோவை:

கோவைப்புதூர் பகுதியை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் இந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவு கடந்த 9-ந் தேதி வெளி வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் அவருக்கு நேற்று காலை பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு இது 2-வது பிரசவம் ஆகும்.

இதுகுறித்து இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் நிர்மலா கூறும்போது, கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாய்-சேய் நலமாக உள்ளனர் அந்தக் குழந்தைக்கு 3 நாட்கள் கழித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இஎஸ்ஐ ஆஸ்பத்திரியில் இன்று (நேற்று) ஒரே நாளில் திருநங்கை உள்பட 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் என்றார். 

Similar News