செய்திகள்
கலெக்டர் அருண் ஆய்வு செய்த காட்சி

புதுவை நகர பகுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

Published On 2020-06-17 11:40 GMT   |   Update On 2020-06-17 11:40 GMT
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று இரவு கலெக்டர் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் சிலர் கடைகளை திறந்து வைத்து இருப்பதாகவும், தேவையில்லாமல் மக்கள் வெளியில் நடமாடுவதாகவும் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகர பகுதியில் திடீர் ஆய்வு செய்து, விதியை மீறி 9 மணிக்கு மேல் திறந்திருந்த 10 கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு கலெக்டர் மீண்டும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்ட கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆகியோர் காமராஜர் சாலை, அண்ணா சாலை, மறைமலை அடிகள் சாலை, முதலியார் பேட்டை உள்பட நகரப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது அண்ணா சிலை அருகே சிலர் இருசக்கர வாகனங்களில் சென்றனர். அவர்களை நிறுத்தி, எங்கு செல்கிறீர்கள் என்று கலெக்டர் விசாரித்தார். அவர்களிடம் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரியக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார். இந்த ஆய்வின் போது கலெக்டர் அருண், தானே காரை ஓட்டி சென்றார்.
Tags:    

Similar News