செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்;
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தை அடுத்த சிறுமங்காடு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கமலக்கண்ணன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மனைவி கீதா. சில நாட்களுக்கு முன் கீதா வீட்டை பூட்டி விட்டு மகள்களுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கீதாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் விரைந்து வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அங்கு இருந்த 10 பவுன் நகை திருடப்பட்டிருந்தது. இது குறித்து கீதா சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மணிமாறன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.