செய்திகள்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி

கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

Published On 2020-06-13 15:08 IST   |   Update On 2020-06-13 15:08:00 IST
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது
ஈரோடு:

தேசிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசித்தார். அதை அனைத்து துறை அதிகாரிகள் திரும்ப கூறி எடுத்துக்கொண்டனர். உறுதிமொழி வருமாறு:-

இந்திய அரசியல் அமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர்கள் முறையை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் எனவும் தமிழகத்தை குழந்தை தொழிலாளர்கள் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமாற உறுதிகூறுகிறேன்.

இவ்வாறு கலெக்டர் உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அதிகாரிகள், பணியாளர்கள் திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் ஈரோடு ஆர்.டி.ஓ. வைபுதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வனிதாமணி ஜெகதாம்பாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஈஸ்வரன் (கணக்குகள்), ஜெகதீஷ் (வளர்ச்சி), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் இ.வேல்முருகன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் பாலதண்டாயுதம், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கணேஷ்ராம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை கலெக்டர் டி.எஸ்.இந்திரா, தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தின் திட்ட இயக்குனர் சி.பன்னீர்செல்வம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி சதீஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.

Similar News