செய்திகள்
ஈரோடு மாவட்டம்

ஈரோட்டில், இன்று தனியார் பஸ்கள் இயங்கவில்லை

Published On 2020-06-10 15:04 IST   |   Update On 2020-06-10 15:04:00 IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. நாளை முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

தமிழகம் முழுவதும் இன்று முதல் தனியார் பஸ்கள் 50 சதவீதம் இயக்கப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் தெரிவித்து இருந்தார்.

அதன் படி இன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தனியார் பஸ்கள் இயங்க தொடங்கியது.

ஆனால் ஈரோடு மாவட்டத்தில் இன்று தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. நாளை முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்த வரை 270 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது ஈரோடு பஸ் நிலையத்தில் 2 நிறுத்தத்தில் மட்டும் பஸ் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. மீதி பகுதிகளில் தற்காலிக நேதாஜி காய்கறி தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை முதல் இந்த நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்படும்.

நாளை முதல் தனியார் பஸ்கள் இயக்கப்பட உள்ளதால் பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளன அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் நாளை முதல் ஈரோடு மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயங்கும் என ஈரோடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து இன்று ஈரோட்டுக்கு தனியார் பஸ்கள் வந்தன. அதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணம் செய்தனர். தனியார் பஸ்கள் போல் மினி பஸ் களையும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Similar News