செய்திகள்
குடிநீர் தட்டுப்பாடு

செய்யூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்

Published On 2020-06-10 13:44 IST   |   Update On 2020-06-10 13:44:00 IST
செய்யூர் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம்:

செய்யூர் அருகே உள்ள பெருக்கரணை ஊராட்சியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த ஊராட்சியில் கடந்த மூன்று நாட்களாக குடி தண்ணீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று தெரிகிறது.

தொடர்ந்து குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் குடிதண்ணீர் கேட்டு அப்பகுதியில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி மற்றும் நிர்மலன் ஆகியோர் விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், ஒரு மணி நேரத்தில் மின் மோட்டார் சீரமைத்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

Similar News