செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த கீவளூர் ஊராட்சியில் கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் போலீசார் கீவளூர் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓடமுயன்றார். போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கிப்பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர் கீவளூர் பகுதி பஜனை கோவில் தெருவை சேர்ந்த சகா என்ற சீனிவாசன் (வயது 21) என்பதும் அவர் அங்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. போலீசார் சகாவை கைது செய்து அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இவர் ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கில் சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.