செய்திகள்
காஞ்சீபுரத்தில் நவீன விளையாட்டு வளாக கட்டிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த காட்சி

காஞ்சீபுரத்தில் நவீன விளையாட்டு வளாக கட்டிடம் - எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Published On 2020-05-30 15:50 GMT   |   Update On 2020-05-30 15:50 GMT
காஞ்சீபுரத்தில் ரூ.15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன விளையாட்டு வளாக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
காஞ்சீபுரம்:

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி வாகை சூடும் வகையில் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்புகளை இடித்துவிட்டு, அந்த இடத்தில் ரூ.15 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன தரத்துடன் கட்டப்பட்டுள்ள கூட்ட அரங்கம், அலுவலர் அறை, பயிற்றுனர் அறை, அலுவலக அறை, ஆண்கள், பெண்கள் உடை மாற்றும் அறை, சமையலறை, உணவருந்தும் கூடம், தங்குமிட வசதி, கணினி அறை, நூலகம், பதிவறை, இருப்பு அறை, முதல் உதவி அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய விளையாட்டு வளாக நிர்வாக கட்டிடம், பார்வையாளர் மாடத்துடன் கூடிய திறந்தவெளி விளையாட்டரங்கம், கூடைப்பந்து மற்றும் கையுந்து பந்து ஆடுகளங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக வளாகத்தில் சைக்கிளிங் பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த ஏதுவாக ரூ.6 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 333 மீட்டர் சுற்றளவு கொண்ட சைக்கிளிங் வெலோடிரம், பார்வையாளர் மாடம், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தனித்தனியே தங்குமிட வசதி, சைக்கிள் பட்டறை, சைக்கிள் இருப்பு அறை, உடற்பயிற்சிக் கூடம், பயிற்றுனர் அறை, அலுவலக அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நிர்வாகக் கட்டிடம், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.4 கோடியே 84 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆறு வரிசைகள் கொண்ட 400 மீட்டர் செயற்கை இழை ஓடுதளப்பாதை என ஒட்டுமொத்தமாக ரூ.27 கோடியே 44 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு கட்டமைப்புகளையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News