வல்லத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது
வல்லம்:
தஞ்சை அருகே உள்ள திருமலை சமுத்திரத்தை சேர்ந்த தங்க பிரகாசம் என்பவரின் மகள் பிரின்ஸி (வயது 26).
சம்பவத்தன்று இரவு வீட்டில் பிரின்ஸி தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டினுள் நுழைந்து பிரின்ஸி அணிந்திருந்த 3½ பவுன் சங்கிலியை பறித்தனர்.
புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வல்லம் டி.எஸ்.பி சீதாராமன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வல்லம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சிவக்குமார்(26) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அவருடைய தம்பி விஜயகுமார் என்பவரும் சேர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இந்நிலையில் நேற்று வல்லம் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், தாமஸ் மற்றும் போலீசார் வல்லம் அண்ணாநகர் பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
போலீசார் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் வல்லம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த விஜயகுமார்(வயது 22) என்பதும் நகை பறிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர்.