திருக்கனூர் அருகே வீடு கட்டும் தகராறில் அண்ணன்-தம்பி மோதல்
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே குமாரபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீர ராகவேல் (வயது40). இவரது அண்ணன் மோகன் (55). இருவரும் விவசாயிகள். இவர்கள் இருவருக்கும் பொதுவாக உள்ள இடத்தில் வீடு கட்டுவது சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது.
சம்பவத்தன்று இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மோகன் அவரது மனைவி லட்சுமி, மகன் பார்த்தீபன், மகள் பவித்ரா மற்றும் உறவினர் ஹரிஷ் ஆகிய 5 பேரும் சேர்ந்து வீர ராகவேலுவை செங்கல் மற்றும் தடி-இரும்பு பைப்பால் சரமாரியாக தாக்கினர்.
மேலும் கத்தியை எடுத்து வந்து கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இந்த தாக்குதலில் காயமடைந்த வீர ராகவேலு கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கனூர் அருகே செல்லிப்பட்டு புதுகாலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது24). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மினிவேன் டிரைவர் சபரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த சபரி மற்றும் அவரது தரப்பை சேர்ந்த அம்மனங்குப்பம் வெங்கட்டராமன் மற்றும் செந்தில் ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரை தடியாலும், கல்லாலும் தாக்கினர். இதில் மணிகண்டன் காயமடைந்தார்.
இதுகுறித்து மணிகண்டன் திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சபரி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.