செய்திகள்
விவசாயியிடம் சங்கிலி பறிப்பு- 2 பேர் கைது
சீர்காழி அருகே விவசாயியிடம் 5 பவுன் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே தொழுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது 70). விவசாயி. சம்பவத்தன்று பிச்சைமுத்து, அந்த பகுதியில் தனக்கு சொந்தமான வயலில் உள்ள பம்புசெட் அருகே தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு தண்ணீர் குடிப்பதுபோல் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென பிச்சைமுத்துவை கீழே தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக தொழுதூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் முத்தழகன் (24), குத்தாலம் பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி மகன் வாசுதேவன் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.